Friday, June 21, 2013

ஹாப்பி பர்த்டே விஜய் !!!

"குட்டி.ஐ  லவ் யூ " தமிழ் சினிமா கலெக்டர் யூனிபார்ம் ஆன முக்கால்கை ரவிக்கையோடு சிம்ரன் வீறிடும் துள்ளாத மனமும் துள்ளும் க்ளைமாக்ஸ் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது . காரணம் அன்றே நானும் என் பத்தாம் வகுப்பு  ஊர் தோழர்கள் சிலரும் வயசுக்கு வந்த நாள். அதாவது ஊரிலிருந்து பொள்ளாச்சி டவுனுக்கு தனியாக வந்து படம்பார்க்க தகுதியான வயசுக்கு வந்த நாள்.

யார் என்ன ஊர் என கேட்டாலும் வீறாப்பாக பொள்ளாச்சி என சொல்லிவிட்டாலும் ஊர் என்னவோ பொள்ளாச்சியில் இருந்து ஒரு மணி நேர தொலைவில் இருந்த சின்ன கிராமம்தான் . பக்கத்துக்கு ஊரில் இருந்த தியேட்டர் என பெயர் மட்டும் மாற்றப்பட்ட டெண்டுகொட்டகை  வரையுமே அதுவரை  தனியாக சென்று வர அனுமதி இருந்தது.டென்த் கடைசி எக்ஸாம் என்பதால் நண்பர்களோடு சென்று வர  இந்த சிறப்பு அனுமதி

சில நண்பர்களை பிரியும் சோகம்  , திடீரென கிடைத்த சுதந்திரமும் , பதினைந்து ரூபாயும் தந்த பரவசம்  என அந்த நாளை ஞாபகம் வைக்க ஏற்கனவே தேவையான அளவு காரணங்கள் இருந்தாலும் துள்ளாத மனமும் துள்ளும் படமே  அவை அனைத்தையும் கோர்ப்பதாக இன்று வரை உள்ளது. விஜய் நெருக்கமானதும் அப்படியே

சற்றே வளர்ந்து டபுள் மீனிங் புரிய ஆரம்பித்த வயதில் வந்த குஷி விஜயை இன்னும் நெருக்கமாக்கியது. "மூச்சை எல்லாரும்தான் விடறாங்க" என்ற விஜயின் டயலாக்குக்கு அர்த்தம் முழுதாய் புரியா விட்டாலும் கன்னாபின்னா  என வெட்கப்பட்டு வைத்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

அதன் பிறகு பள்ளி நண்பர்களை போலவே விஜயும் சில பல மொக்கை படங்கள் கொடுத்து விலகி போனார். கல்லூரியில் சரக்கடிக்க ஆரம்பித்த புதிதில் பாதி பீரில் முழு போதை ஏறி போய் பார்த்த படம் கில்லி. "மச்சி .செம படம். விஜய் கெத்துடா . பர்ஸ்ட் ஹாப் என்னா ஸ்பீடு! மப்பே இறங்கி போச்சுடா. ரூம்ல சரக்கு இருக்கா ?" என திரும்பவும்   உடனடி விஜய் பேன் ஆன இரவு அது.

மீண்டும் விழுந்து போனார் விஜய். விஜய் யானை வர்க்கம் போல. பிரபுக்கு இணையாக  நகைகடை விளம்பரத்தில் நடிப்பதற்காக மட்டும் இதை சொல்லவில்லை. அப்பாவின் கையை உதறி மீண்டும் எழ சில வருடங்கள் ஆகி போனது. கண்டிப்பாக எழுந்து விட்டார் என்றே நினைக்கிறேன்

சமீபத்தில் குடும்பஸ்தனாக துப்பாக்கி பார்த்த போது , அதே பத்தாம் வகுப்பு சிறுவனாக கை தட்டி ரசிக்க வைத்தது விஜயின் மிக பெரிய பலம். என் பள்ளிக்கால புகைப்படத்தை எனக்கே அடையாளம் தெரியாத பொழுதில் , நான் சிறு வயதில் ரசித்த அதே  உருவத்தில் அதே துடிப்புடன் அதே விஜயாக இருக்கும் அசாத்திய உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் வேறு எந்த நடிகரிடமும் இதை காண முடிவதில்லை

எத்தனையோ விமர்சனங்களை வைத்தாலும் , "விஜய் பாத்து போதுப்பா" என தமிழ்நாட்டின் அனேக குழந்தைகளை ஈர்க்கும் சக்தி உள்ள விஜய் ,  மீண்டும் விழுந்து எங்களை  கஷ்டப்படுத்தாது, இதே கவனத்துடன் இதே  துடிப்புடன் தொடர்ந்து எங்களை மகிழ்விக்க வாழ்த்தி கேட்டு கொள்கிறோம்

ஹாப்பி பர்த்டே D(ea)r. விஜய் !!!

Monday, April 1, 2013

வேட்டை நாய்கள்

"டொக் டொக் "

இந்த நேரத்தில் யார் கதவை தட்டுவது. இது கண்டிப்பாக கனவாகத்தான் இருக்கும். அப்படிதான் இருந்தாக வேண்டும் . 

"டொக் டொக் "

இந்த முறை பலமாக கதவு தட்டப்பட்டது. வாரி சுருட்டி கொண்டு எழுந்தேன். நான் இங்கே இருப்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. முனியன் காட்டி கொடுத்து இருப்பானோ ? ச்சே. இருக்காது முனியன் எட்டு தலைமுறைகளாக என் குடுமபத்துக்கு வேலை செய்பவன் . அவன் கல்யாணத்தை கூட நான் தான் நடத்தி வைத்தேன். 

"டொக் டொக் டொக் "

மலை உச்சியில் இருக்கும் ஒற்றை  வீடு இது. இங்க இருந்து தப்பிக்க மலையில் இருந்து குதிப்பதை தவிர வேறு வழியில்லை . இதை எப்படி கண்டுபிடித்து வந்தார்கள். டேனியல் துரை கலககாரர்களை நடத்தும் முறை மிக  கொடூரமானது. அதற்க்கு மலையில் இருந்தே குதித்து விடலாம். அழுகையை அடக்கி கொண்டேன். தப்பித்து ஆக வேண்டும். 

வெளியேற ஒரே வழி அந்த கதவுதான். கதவின் முன்னால் இந்நேரம் பீரங்கிகள் நிறுத்த பட்டிருக்கலாம். சிறு நேரம் சூழ்ந்த நிசப்தம் அவர்கள் திரும்பி சென்றிருக்கலாம் என்று ஆசுவாசுபட்ட நிம்மதியில்  கதவு உடைபடும் சப்தம் இடியென விழுந்தது 

முடிவு நெருங்கி விட்டது.. அறையில் இருந்த harddisk அனைத்தயும் ஜன்னல் வழி வெளி எறிந்தேன். இந்த வார நீயா நானா பார்க்க முடியாது என்ற எண்ணமே தொண்டையை அடைத்தது. கதவு உடைந்து விழுந்த அதே சமயம் iPhoneல் நான் எழுந்திருக்க வைத்திருந்த அலாரம் சாவுமணியென அடித்தது. நல்ல டைமிங் . கடைசியா சிரித்து கொண்டேன். 

கதவின் வழி மெல்லிய உறுமலுடன் உள்ளே நுழைந்த வேட்டை நாய்கள் கண்களில் மின்னிய சிறு குரூரத்தோடு முன்னேறின. இதற்க்கு என்னை சுட்டு கொன்று இருக்கலாம் . இரண்டாம் முறைஅலறியது iPhoneன் அலாரம். இந்த டைமிங் அவ்வளவாய் எனக்கு விருப்பமில்லை . கண்களை மூடி கொண்டேன்

முதுகின் மேல் பலமான் ஒரு உதை விழுந்தது. " ஆபீஸ் போக நினைப்பிருக்கா இல்லையாடா ?" என கேட்டபடியே கெளம்பி வெளியேறி கொண்டிருந்தான் ரூம் மேட் நண்பன். 

வேட்டை நாய்களிடம் இருந்து காப்பாற்றிய அவனை நன்றியோடு ஒரு பார்வை பார்த்தபின்னர் போர்வையை மீண்டும் மூடி படுத்தேன்.

Friday, January 25, 2013

விஸ்வரூபம் - பட விமர்சனம்

விஸ்வரூபம் ...  கிருஷ்ணரின் விஸ்வரூபம் பார்க்க கர்ணன் பட்ட கஷ்டத்தை விட அதிக கஷ்டத்தை ரசிகர்களுக்கு கொடுத்து , தமிழ்நாட்டில் மட்டும் தடை செய்யப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையோடு வந்த  விஸ்வரூபம் எதிர்பார்ப்பை தக்க வைக்கிறதா  என்றால் இல்லை என்பதே வருத்தம்  ..

28  அமைப்புகள் எதிர்பார்த்த இசுலாமிய  துவேஷம் இந்த படத்தில் இல்லை.  அவர்கள் சொன்ன விதத்தில் நிச்சயமாய் இல்லை . கமல் படத்தில் வழக்கமாக எதிர்பார்க்கும் அளவு குழப்பம் இல்லை . ஓரளவு நன்றாகவே புரிகிறது. ஒரு முத்த காட்சி கூட இல்லாம உங்களை கூண்டோடு   ஏமாற்ற கூடிய கமல் படம் இது . மற்றபடி இந்த படம் உங்களை சற்றே ஆச்சர்ய படுத்தலாம் . ஒரு 2.5 மணி நேரம் நெளியாமல் அமர வைக்கலாம் . முடிந்து எழும்போது கை தட்ட வைக்கலாம் 


தான் எழுதி பாடிய பாடலோடு , கதக் நடன அசைவுகளோடு,  அரங்கம் அதிரும் கை தட்டல்களோடு அறிமுகம் ஆகிறார் உலகநாயகன் . புரிந்தால் சிரிச்சுக்கோங்க எனும்  கமல் பாணி காமெடி நிறைந்த முதல் 20 நிமிடத்திற்க்கு பிறகு "நான் யாரெனறு தெரிகிறதா" என  கமல் எடுப்பதே ரூபம் ரூபம் விஸ்வரூபம்... 
தலிபான் பயிற்சி , போர் விமான தாக்குதல்  , ஆப்கான லொகேசன் , நியூயார்க் கார் சேசிங் , பாம் ப்ளாஸ்ட்டிங்  என ஹாலிவுட் கிளிஷேக்களை கிட்டதட்ட தத்ரூபமாக ஒரு தமிழ் படத்தில் எடுத்ததே இயக்குனர் கமலின் வெற்றி. கமல் குரலில் சொல்வதென்றால் "ஆங்.தொழில் நுட்ப ரீதியில் இது கண்டிப்பாக தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் என தைரியமாக சொல்ல பயப்பட தேவை இல்லை".

கிளைமாக்ஸ்சில்  ஒரு திருப்பம் வைக்க , கடைசியாய் கமலை கட்டி பிடிக்க , ஒரு சில உள்ளாடை காட்சிகளுக்கும் பூஜா குமார். (இந்து மக்கள் கட்சி கவனிக்க கள்ள காதலை நியயாபடுத்துகிற வசனம் பேசிகிறார். ஒரு நாலு கள்ள காதலர்களை பார்சல் அனுப்பி வைக்கவும்) . தமிழ் பட விதிகளின் படி அமெரிக்காவில் லூசாக இருக்கிறார் கதாநாயகி. ஒரு சில எக்ஸ்ப்ரசனை தவிர பெரிதாய் சொல்ல ஒன்றுமில்லை.

சில நேரம் தொய்வு,  மற்ற நேரம் பர பரப்பு என தட தடக்கும் படம் , ஹாலிவுட் தயாரிப்பாளர் வந்து இரண்டாம் பாகம் எடுங்கள் என்று கமலிடம் கேட்டு கொண்டதால் . சற்றே அரைகுறை கிளைமாக்ஸ்சுடன்  சுபமாய் முடிகிறது  விஸ்வரூபம்.,

ஏன் பெண்மைதன்மையுடன் கூடிய கதக் வேஷம் ஆரம்பத்தில் ?(கமலுக்கு நடிக்கக தெரியும்னு  எங்களுக்கு தெரியாதா ? ) 
அமெரிக்காவில் இருக்கும் வெடிகுண்டை செயலிழக்க செய்ய எதற்கு FBI இடம் இருந்து தப்பி கார் சேசிங் ?
கேப்டன் படத்தை காப்பி அடித்தது போல எப்படி எல்லா தீவிரவாதிகளும் கடித்து துப்பிய தமிழில் பேசுகிறார்கள் ?
அமெரிக்க முக்கிய நகரில் அணுகுண்டு என தெரிந்தும் கூட ஏதோ தொலைந்து போன செல்போனை தேடுவதை போல தேடும் அமெரிக்கா போலீஸ் என்ன அவ்ளோ அம்மாஞ்சியா ? என சில பல லாஜிக் நெருடல்கள் ( கொஞ்சம் கவனித்து இருக்கலாம் கமல் சார் ) சம்பந்த பட்ட கேள்விகள் இருந்தும் தொக்கி நிக்கும் ஒரே ஒரு முக்கிய கேள்வி

" ஆண்ட்ரியாக்கு  இந்த படத்துல என்ன ரோல் , எதுக்கு இருக்காங்க " ?
(இதே கேள்வியை கௌதமி ஏற்கனவே இடுப்பில் கை வைத்து  முறைத்தபடி கமலிடம்  கேட்டு இருக்கலாம் என அவதானிக்கிறேன் )

 மொத்தத்தில்  தமிழ்  படத்தை ஹாலிவுட் ஆக்கி விட்டரா கமல்  என கேட்டால் அதற்கான கதவுகளை அகலமாக திறந்து வைத்திருக்கிறார் எனலாம் . நடுவில் கொஞ்சம் அலுப்பு  தட்டினாலும் கமர்சியல் பொழுதுபோக்கு சார்ந்த படங்களில் விஸ்வரூபம் விருமாண்டிக்கு கீழ் தசாவதாரம்க்கு மேல் . மற்றபடி தடை விதித்தது எல்லாம் படத்தின் ஒரு காட்சியில்  FBI ஆபிசர் கமலை பார்த்து "WHO ARE YOU MAN ?" என பிரமிப்பது போல தேவையற்ற செயல் என்பது  என் கருத்து 

டிஸ்கி 1: அமெரிக்க திரை அரங்கம் ஒன்றில் பார்த்தது . இடைவேளையே விடல. நல்லவேளை  அலெக்ஸ் பாண்டியனை இங்க பாக்கலேன்னு சந்தோஷ பட்டாலும் கொஞ்சம் நீளம் குறைத்து இருக்கலாம்.
டிஸ்கி 2: ஒரு காட்சியில் கமலின் கைகளை கேமரா focus செய்கையில் அத்தனை சுருக்கம்.. சற்று வருத்தம்தான் . கமலுக்கு வயசாகி போச்சு . ஹாலிவுட் ஹீரோ ஆக தகுதியான வயசாகி போச்சு 

Wednesday, January 23, 2013

ஒரு (ம)ரண சாசனம்

காலாவதி ஆகாததும் காலாவதி ஆனாலும் பெரிய வித்தியாசம் இல்லாத பொருள்கள் உலகில் ரெண்டு. அதில் ஒன்று " விஷம்"

குடிப்பதாக முடிவு செய்தாகிவிட்டது. அரை நொடி அசட்டு துணிச்சல் போதும். கசக்கும் என்ற ஒரே கஷ்டத்தோடு அனைத்து கஷ்டங்களும் முடிவுக்கு வரலாம் என்ற அசட்டு நம்பிக்கை. உடலின் எதோ ஒரு மூலையில் வேண்டாம் என கதறி கொண்டிருந்த மனதை அடக்கி குவளையை  கையில் எடுத்தேன் . நடுங்கி கொண்டிருந்த விரல்கள் சற்று விறைப்பானது.

கிராமத்து கூட்டு குடும்பமாக இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. பகிர்ந்து கொண்டாலே பாதி துயர் குறைந்திருக்கும். நகரத்து ஒண்டி குடித்தன சமூக அமைப்பு குறித்து மனதுக்குள் படு மோசமாக திட்டி கொண்டேன்.


 "ஏன் இந்த முடிவு?"  என்று யாராவது கேட்டால் பெரும் ஓலம் எடுத்து "விதி" என்று கத்த வேண்டும் போல இருந்தது. கேட்பார் யாருமில்லை.கத்தியும் பிரயோஜனமில்லை. குவளை வாயை நெருங்கி இருந்தது.

கடைசியாய் ஒரு முறை அம்மா கையால் சாப்பிட வேண்டும் போல இருந்தது .திடீரென சம்பந்தமில்லாமல்  பாராட்டோ சால்னா கூட ஞாபகத்தில் வந்து சென்றது . முட்டாள்தனம். இனி தாமதிப்பதில் உபயோகமில்லை. 


"மடக்" .. 


குடித்தே விட்டேன் . பல நூறு
கத்திகளென  தொண்டையை  கிழித்து கொண்டு மிக வேகமாய் இறங்க துவங்கியது திரவம்.  பார்வை சற்று மங்கலாக துவங்க ஏதோதோ ஞாபகங்கள் தோன்றி மறைய , சன்னமாகி விட்ட குரலை தேடி கண்டு பிடித்து சொன்னேன்

" ரசம் ரொம்பவே நல்லா  இருக்கு ப்ரியா. முதல் தடவை மாதிரியே தெரியலே"


" உங்களுக்கு புடிக்கும்னு தெரியும். அதன் லஞ்சுக்கும் சேத்து கட்டி 

இருக்கேன் "

சரி விடு. சத்ரியனின் நாக்குக்கு ஒரு தடவைதான் மரணம்.


நான் ஏற்கனவே சொன்ன மாதிரி காலாவதி ஆகாததும் காலாவதி ஆனாலும்
பெரிய வித்தியாசம் இல்லாத பொருள்கள் உலகில் ரெண்டு. அந்த  மற்றொன்று 
" ரசம்"