இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. முழுக்க முழுக்க கற்பனையே.. இப்படியே ஆரம்பிக்கும் கதைகள் ஆரம்பிக்கும் முன்பே சலிப்பு தட்டிவிடுகிறது. முழுக்க கற்பனையான, யாரையும் புண்படுத்தாத கதையில் அப்படி என்ன சுவாரசியம் இருந்துவிட கூடும்.
அப்புச்சி சொல்லும் எந்த கதையிலும் இந்த முட்டாள்தனமான க்ளிஷேக்கள் இருக்காது. முழுக்க கற்பனையா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அவர் கதைகளால் புண்படாத ஆட்களே ஊரில் இல்லை என்பது மட்டும் தெளிவு.சுவாரசியத்திற்கும் குறைவு இருந்ததேயில்லை.
அப்புச்சி சொல்லும் எந்த கதையிலும் இந்த முட்டாள்தனமான க்ளிஷேக்கள் இருக்காது. முழுக்க கற்பனையா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அவர் கதைகளால் புண்படாத ஆட்களே ஊரில் இல்லை என்பது மட்டும் தெளிவு.சுவாரசியத்திற்கும் குறைவு இருந்ததேயில்லை.
"செல்லத்தாயி வீட்டு திண்ணையிலேதேன்டா படுத்து கிடப்பேன். அவ வீட்டுல இருந்து பத்து வருஷத்துல வந்த ஒரே சத்தம் அவ டெய்லரோட ஓடிப்போன அன்னைக்கு அவ புருஷன் ஒப்பாரி வச்சு அழுத சத்தந்தேன்.அப்புறம் ஓடிப்போகாம என்ன பண்ணுவா? "
அப்புச்சியின் கதைகளுக்கு எந்த சென்சார் போர்டும் கிடையாது.
அப்புச்சியின் கதைகளுக்கு எந்த சென்சார் போர்டும் கிடையாது.
ஊரில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் அவர் அப்புச்சிதான்.அப்புச்சிக்கு குழந்தை குட்டிகளென யாரும் கிடையாது. அவர் சேர்த்து வைத்த ஒரே சொத்து இந்த கதைகளும், அதை சொல்லும் சுதந்திரமும்தான். அந்த காலத்தில், ஊரிலேயே எழுத படிக்க தெரிந்த ஒரே ஆள் அப்புச்சிதான். அதிகமாய் படித்து படித்தே அவர் பைத்தியமாகி விட்டதாகத்தான் கேள்வி. அதனால் படித்தால் பைத்தியமாகிவிடுவோம் என்பது ஊர்மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
"இந்தா போறான் பாரு பழனிசாமி. கைல நாலணா இருந்தா கோழிக்கு முன்னே வெள்ளனே எந்த்ரிச்சு இவன் கூவுவான். கையில எட்டணா இருந்தா ஊர்கிணத்துல ஓடிப்போய் ஒன்னுக்கடிச்சு வச்சுருவான்.அதான் கருப்புசாமி இவனை பிச்சைக்காரனாவே வச்சுருக்கு" என பழனிசாமி கடந்து செல்லும்போதே சத்தமாக சொல்லும் உரிமையை அப்புச்சிக்கு தோல்சுருக்கங்கள் அடர்ந்த முதுமையும், பைத்தியகார பட்டமும் வாங்கி தந்திருந்தன.
அப்புச்சி கதைகளில் இதுவரை நாயகர்கள் ஆகாத ஊர் ஆம்பளைகளை ஒரு கையால் எண்ணி விடலாம்.அவர்கள் அனைவருக்கும் வயது ஐந்திற்கு கீழேதான் இருக்கும். அவர்கள் பிறந்த கதைகளை ஏற்கனவே அப்புச்சி விலாவாரியாக சொல்லியிருந்தது வேறு விஷயம்.
கதையின் திடீர் திடுக் திருப்பமாக ஒரு பௌணர்மி நாள் முதல், அப்புச்சி பேசுவதை நிறுத்தி விட்டார். பாரதிராஜா படங்களில் திடீரென கடல் அலைகள் நின்று போவதை போல, தென்னைமரங்கள் திடீரென அசைவை நிறுத்தியதை போல, ஊரே திடீரென மயான அமைதியில் ஆழ்ந்தது.
இரு தினங்கள் அப்புச்சி பேசுவதில்லை என்பதை உறுதி செய்தபின்,சிறப்பு அர்ச்சனைக்காக ஊர் பெண்கள் கோவிலுக்கும், பட்டாசும் சாராயமும் வாங்குவதற்காக வெளியூருக்கு ஆண்களும் உற்சாகத்துடன் கெளம்பி சென்றனர்.இது உண்மைதானா என தன்னைத்தானே கிள்ளியும், வாய்ப்பிருந்தவர்கள் சில இடுப்பையும் கிள்ளி பார்த்து கொண்டனர். அப்புச்சி அமைதியாகி விட்டதால் யார் இடுப்பையும் யாரும் கிள்ள அங்கு கட்டற்ற சுதந்திரம் கரைபுரண்டு ஓடியது.
இரு தினங்கள் அப்புச்சி பேசுவதில்லை என்பதை உறுதி செய்தபின்,சிறப்பு அர்ச்சனைக்காக ஊர் பெண்கள் கோவிலுக்கும், பட்டாசும் சாராயமும் வாங்குவதற்காக வெளியூருக்கு ஆண்களும் உற்சாகத்துடன் கெளம்பி சென்றனர்.இது உண்மைதானா என தன்னைத்தானே கிள்ளியும், வாய்ப்பிருந்தவர்கள் சில இடுப்பையும் கிள்ளி பார்த்து கொண்டனர். அப்புச்சி அமைதியாகி விட்டதால் யார் இடுப்பையும் யாரும் கிள்ள அங்கு கட்டற்ற சுதந்திரம் கரைபுரண்டு ஓடியது.
பிரசிடெண்ட் சபாபதிதான் மலையாள மாந்த்ரீகர் துணையுடன் அப்புச்சி வாயை கட்டிவிட்டார் என பரவலாக ஒரு பேச்சு இருந்தது. அது பொய் என்றும் அந்த மலையாள மாந்த்ரீகர் எல்லாம் வெறும் மூட நம்பிக்கை என்றும், அவர் பணம் பிடுங்கும் ஏமாற்றுகாரர்தான், மூன்று தடவை முயற்சி செய்தும் அவரால் தன் பொண்டாட்டி வாயை கட்ட முடியவில்லை என சுப்பண்ணா கண்ணீர் மல்க தெரிவித்த நாள்தான், அது அடுத்த எலெக்ஷனுக்காக சபாபதியே கட்டி விட்ட கட்டுக்கதை என தெரிந்தது.
அரசமரத்தடியில் கண்ணில் நிறைந்து வழிந்த அமைதியோடு எதுவும் பேசாமல், நகராமல் அமர்ந்திருந்த அப்புச்சியை மோகினிபிசாசு அடித்து விட்டது, அப்புச்சிக்கு அருள் கிடைத்துவிட்டது என பல கதைகள் சடுதியில் முளைத்தன. பேய்க்கு பயந்த ஊர் என்பதாலும், பேய்க்கு பயந்தால் இரவுநேரத்தில் எதுவும் செய்ய முடியாது என்ற ஆழ்ந்த சிந்தனையாலும், சாமி அருள் கிடைத்த கதையே ஏகமனதாய் தேர்வு செய்யப்பட்டது.
அப்புச்சி ஏதாவது பேசிவிடுவாரா என்ற பயத்தில் கடந்து சென்ற மக்கள், இப்போது பயபக்தியுடன் கடந்து சென்றார். அப்புச்சியின் முன்பு திடீரென விபூதி நிரம்பிய அலுமினிய தட்டு முளைத்தது. கருப்புசாமி அப்புச்சிக்குள் இறங்கிவிட்டதாக, மனதில் துணிவுடன் அப்புச்சியை நெருங்கி சென்ற பூசாரி உறுதி செய்தார்."கருப்புசாமீ!! என் தெய்வமே. ஊரை காப்பாத்த வந்து இறங்கிட்டியா சாமீ.." என ஆக்ரோஷமாய் அப்புச்சியை பார்த்து உடுக்கையை வாசிக்க, ஊர் ஆவேசமாய் கன்னத்தில் போட்டுக்கொண்டது.
"சாமீ.சாமீ. என்னை மன்னிச்சுரு சாமீ.கேரளா பூசாரிகிட்ட போனது தப்புதான்.குப்பத்தா வீட்டுக்கு ராத்திரி போனதும் தப்புதேன்.என் குலத்தை அழிச்சிராதே சாமீ.." என அப்புச்சி முன்பு உருண்டு உருண்டு அழுத பிரசிடெண்ட் சபாபதியை ஊரே வியப்பாகவும், குப்பத்தா புருஷன் வெறியோடவும் பார்த்த அந்த நாள் முதல் அப்புச்சி அந்த ஊரின் அதிகாரப்பூர்வ காவல் தெய்வமானார்.
அப்புச்சி சாமி முன்வந்து செய்த பாவங்களை சொல்லி உருண்டால் மூன்றே நிமிடங்களில் பாவ விமோச்சனம் என்றும், அடுத்த ஏழு நாட்களில் அதிர்ஷடம் வீட்டுக்கதவை அல்லது பின்கதவை கண்டிப்பாக தட்டும் என்ற கதை காட்டுத்தீ போல் பரவியது. இந்த கூத்துக்களை எல்லாம் ஆமோதிப்பது போலவே அப்புச்சி சாமியின் தலை லேசாக, சீராக ஆடிக்கொண்டிருந்தே இருந்தது.
அப்புச்சி சாமீ கை காட்டும் திசையில் கோவில் கட்ட வேண்டும் இல்லையேல் இனி ஏழு வருடங்களுக்கு மழை வராது என்பதை அந்த ஊர் வானிலை நிபுணர் முந்தைய கருப்புசாமி கோவில் பூசாரி, இன்றைய அப்புச்சி சாமி பூசாரி ஆராய்ந்து அறிவித்தார். அப்புச்சியிடம் பாவ விமோச்சனம் பெற கூடிய கூட்டம் நாளுக்கு நாள் கூடி கொண்டே போனதால் கோவில் கட்ட பணம் மழைக்கால வெள்ளமென சேர்ந்தது.
கருப்புசாமி இறங்கியதால் எந்நேரமும் ஆடியபடி இருந்த தலையுடனும், கோவில் கட்டும் திசையை குறித்தபடி ஒரு தினுசாக வளைந்திருந்த இடது கையுடனும், ஏதோ புரியாத மந்திரங்களை முனகியபடி கோணியிருந்த வாயுடனும் கம்பீரமாய் அரசமரத்தடியில் வீற்றிருந்த அப்புச்சி சாமி ஒரு அமாவாசை நாளன்று மலையேறினார்.
அவரை புதைத்த இடத்தில் முளைத்த கோவில் " கோணவாய் அப்புச்சி சாமீ துணை" என்ற பெரிய எழுத்துகளின் கீழே "உபயம் ப்ரசிடெண்ட் சபாபதி " என்ற சிறிய எழுத்துகள் பொறித்த பெயர் பலகையுடன் பிரசித்தி பெற்றது. அப்புச்சி சாமீ மலையேறிய நாள் வருடா வருடம் திருவிழா நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. அடுத்த எலெக்ஷனில் சபாபதியே ப்ரசிடெண்ட் ஆனார். குப்பத்தா வார்டு மெம்பர் ஆனார். தினமும் பல கதைகளை சம்பந்தபட்டவர்களே முன்வந்து சன்னதியில் சொல்லுமாறு செய்துவிட்டு மறைந்தது, அப்புச்சிசாமீ அந்த ஊருக்கு கொடையளித்த வரம். ஆனால் அவற்றில் ஒன்று கூட அப்புச்சி சொன்ன கதைகள் அளவு சுவாரசியமாய் இருந்ததில்லை.இருக்க போவதும் இல்லை.